Followers

விண்வெளிப் பயணம்-உண்மை வரலாறுகள்

on Tuesday, April 26, 2011

          விண்வெளியின் புதிர்களை அறிவதில் மனித குலத்துக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்துள்ளது. சுமார் 1825 ஆண்டுகட்கு முன்பு "உண்மை வரலாறுகள் (True Histories)" என்ற தலைப்பில் லூசியான் என்ற கிரேக்க நையாண்டி எழுத்தாளர் ஒரு கற்பனை நூலை எழுதினார். அக்காலத்தில் நிலவி வந்த குற்றங்குறைகளின் அடிப்படையில் முழுக்க முழுக்கப் பொய்யும் கற்பனையும் கலந்த நூலாக அது விளங்கியது. கதிரவனுக்கும், நிலவுக்கும் சென்று பயணம் செய்யும் கற்பனைக் கதை அது.

                          
அடுத்து வந்த பல நூற்றாண்டுகளில், விண்வெளி பற்றிக் குறிப்பிடத் தகுந்த நூல் எதுவும் வெளி வரவில்லை. இருப்பினும், நிலவைப் பற்றியும், விண்மீன்களைப் பற்றியும், அவற்றின் புதிர்களைப் பற்றியும் விளங்கிக் கொள்ள மக்கள் முயன்றே வந்துள்ளனர்.

                          
நிக்கலஸ் கோபர்நிகஸ் என்ற போலந்து நாட்டு வானியல் வல்லுநர் தன்னுடைய ஆய்வுகளின் முடிவில், இந்த அண்டத்தின் மையத்தில் சூரியன் இருப்பதாகவும், இப்புவி ஒரு கோள் என்றும் கூறினார். இத்தாலி நாட்டு வானியல் அறிஞர் கலிலியோ 1610-ல் ஒரு தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். இதன் வாயிலாக விண்வெளியையும், நிலவின் மேற்பரப்பையும் நெருக்கமாகப் பார்க்க முடிந்தது.

                     
நிலவைப் பற்றியும், பிற கோள்களைப் பற்றியும் பல கண்டுபிடிப்புகளைக் கலிலியோ கண்டறிந்து வெளியிட்டார். அவரது கண்டுபிடிப்புகள் மக்களால் வரவேற்கப்படவில்லை. எனினும், ஒரு சில அறிஞர்கள் மட்டும் அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டனர். அப்போது முதலே விண்வெளிப் பயணம் பற்றிய முயற்சிகளில் அறிவியல் அறிஞர்கள் ஆர்வம் காட்டி வந்தனர் எனலாம்.


         வில்கின்ஸ் என்னும் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் 1638-ல் ஒரு நூல் எழுதினார். அதில் நிலவுக்குப் பயணம் செய்ய 4 வழிகள் இருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார். முதலாவது வழியில், தெய்வீக சக்தி ஒன்று மனிதனை நிலவுக்கு அழைத்துச் செல்லக் கூடும். இரண்டாவது, ஆற்றல் மிக்க மிகப் பெரிய பறவைகள் துணையுடன் நிலவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும். அடுத்ததாக மிகப் பெரிய இறக்கைகளைக் கட்டிக் கொண்டு மனிதனே நிலவிற்குப் பறந்து செல்லலாம். நான்காவதாக, பறக்கும் எந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்து, அதில் அமர்ந்து நிலவுக்குச் செல்லலாம். இவையே அவர் கூறிய 4 வழிகள்.பின்னர் ஐசக் நியூட்டன் விண்வெளி பற்றிப் பல அரிய உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார். அவரது இயக்க விதிகள் (laws of motion) புதியதோர் அறிவியல் சிந்தனையை உலகிற்கு அளித்தது. புவியை விட்டு உயரே செல்லச் செல்ல, புவியின் ஈர்ப்பு விசை குறைந்து கொண்டே போகும் என்பதை அவர் நிரூபித்தார். மேலும் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும், விண்மீன்கள் முதற்கொண்டு சின்னஞ் சிறு துகள்கள் வரை அனைத்தும் ஒன்றை ஒன்று கவர்ந்து இழுக்கும் ஆற்றல் உடையவை என்றும், அக்கவர்ச்சி விசையே ஈர்ப்பு விசை எனவும் நிரூபித்தார்.


          விண்வெளிப் பயணத்தில் நியூட்டனின் ஈர்ப்புவிசை விதிக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்விதியின் அடிப்படையிலேயே, புவியின் கவர்ச்சி விசையிலிருந்து விண்வெளி ஓடத்தின் தப்பித்தல் திசை வேகம் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், நியூட்டன் கண்டுபிடித்த மூன்று இயக்க விதிகளும் விண்வெளிப் பயணத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.







0 comments:

Post a Comment